தொடர் கன மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் கலெக்டரிடம் ஓவியர்கள் கோரிக்கை
தஞ்சாவூர்: தஞ்சாவூர், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் நிவாரண உதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாவட்டத்தை சேர்ந்த பல பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். அந்த வகையில் தமிழ்நாடு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நலச்சங்க மாவட்ட செயலாளர் ராக்கின்ராஜ் தலைமையில், மண்டல பாலச்சந்தர், மாவட்டத் தலைவர் சுந்தர்ராஜ் முன்னிலையில் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, நாங்கள் வர்ணம் பூசுதல் மற்றும் கட்டிட வேலை செய்து வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறோம். தற்போது தொடர்ந்து பெய்த கனமழையால் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக வேலை இன்றி மிகுந்த சிரமத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறோம். மேலும் குழந்தைகளின் கல்வி கட்டணத்தையும் கட்ட முடியாத நிலை உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 3500 பெயிண்டர்கள் காண்ட்ராக்ட் பணியை எடுத்து செய்து வருகிறோம். தற்போதைய மழையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு நிவாரண உதவி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது