தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் திறப்பு
தஞ்சாவூர்: தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் திறக்கப்பட்டது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் "கலங் கரை" என்னும் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தமையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். அப்போது தஞ்சையில் நடந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர்.அஞ்சுகம் பூபதி, மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் டாக்டர்.பாலாஜிநாதன், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் (கட்டிடங்கள்) நாகவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மையத்தில் மனநல டாக்டர் தலைமையில் ஆற்றுப்படுத்துநர், சமூகப் பணியாளர், செவிலியர், பாதுகாவலர், மருத்துவமனை பணியாளர், துப்புரவு பணியாளர் என 6 மனநல மருத்துவ பணியாளர்கள் பணியில் இருப்பார்கள். தரமான சிகிச்சையும் வழங்கப்படும். மேலும் அனைத்து மையங்களிலும் மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி, குடும்பத்தினருக்கான ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மறுவாழ்வு சேவைகள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். .......