ஆடி அமாவாசை: தஞ்சாவூர் மூலை அனுமார் கோயிலில் நாளை சிறப்பு வழிபாடு
தஞ்சாவூர் மேலவீதியில் உள்ள மூலை அனுமார் கோயிலில் ஆடி அமாவாசையையொட்டி நாளை (12-ம் தேதி, புதன்கிழமை) சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட 88 திருக்கோயில்களில் ஒன்றான இக்கோயில், வடமேற்கு மூலையில் அமைந்துள்ளதால் மூலை அனுமார் கோயில் என அழைக்கப்படுகிறது. மூலை அனுமாரின் வாலில் சனீஸ்வரர் உள்ளிட்ட நவக்கிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். இதையொட்டி நாளை காலை 7 மணிக்கு இலட்ச ராம நாம ஜெபம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு வறுமை மற்றும் கடன் தொல்லைகள் நீங்கும் வகையில் தேங்காய் துருவல் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறும். காலை 11.30 மணிக்கு மூலை அனுமாருக்கு 1008 எலுமிச்சைப் பழங்களால் அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு ‘அல்லல் போக்கும் அமாவாசை 18 வலம்’ நிகழ்ச்சியும், தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெறுகிறது. ஆடி அமாவாசையன்று பக்தர்களுக்கு எலுமிச்சைப் பழம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கார்த்திகேயன், கோயில் பணியாளர்கள் மற்றும் அமாவாசை கைங்கர்யம் தொண்டர்கள் செய்து வருகின்றனர்.